ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கல்வி வெற்றி தரும்! 


கண்ணெதிரே கேடுகளைக் கண்டும் இங்கே
காணாமற்போல் செல்வார்போல் கடப்பார் உண்டு
பொன்னுதிர பேசிடுவோர் பேச்சில் ஆழ்ந்து
பொல்லாங்கும் செய்திடுவார் பொய்யர் இங்கே
விண்ணதிர உரையாற்றி வெற்றாய்ப் பேசும் 
வீணர்பலர் சொல்வதையே நம்பும் மூடர்
மண்ணுதிரப் போராடும் மல்யுத்தம் போல் 
மன்றாடும் மக்களினை மதியார் அன்றோ? 


வண்ணமுடன் வாழ்வின்றி வருந்தும் ஏழை 
வார்த்தைகளை யார்கேட்ப்பார் வருந்தார் யாரும்
உண்ணவுமே தன்னிடத்தில் ஒன்றும் இல்லார் 
உரைப்பதனைக் கேட்பதற்கு ஒருவர் உண்டோ? 
எண்ணமதில் தீவிரமாய் என்றும் நின்று 
எவ்வகையும் போராடி ஏற்றம் கண்டு 
திண்ணமுடன் நோக்கமதில் தளரா திங்கே 
திடமனத்தால்  வெல்பவர்க்கே தொல்லை விடுமே!


நண்ணியதோர் வாழ்க்கையினை நாளும் காண 
நடுக்கமறக் கற்பதுவே நன்மை கூட்டும் 
நுண்ணியதாய் எதனிலுமே நுட்பம் கண்டு 
நுரையற்ற தெளிநீர்போல் நூல்கள் கற்பீர்  
கண்ணயர்வோர் எந்நாளும் கரையே றாரே 
கருத்துடனே கல்லாதார்  காலம் வெல்லார் 
கண்ணியத்தை எந்நாளும் காத்தே நின்றோர்
கடுந்தடைகள் வந்தாலும் கடன்செய் வாரே!

மெய்ஞானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக